AD

குத்துச்சண்டை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய அருண் விஜய்

அருண் விஜய் தற்போது பாக்ஸர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் குத்துச் சண்டை வீரராக நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக வியட்நாமில் 3 மாதங்கள் தங்கி இருந்து குத்துச் சண்டையை கற்றார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தேசிய குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற 20 தமிழக வீரர் மற்றும் வீராங்கணைகளை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்த வெற்றிக் 20 சாதனையாளர்களுடன் நின்றுவிடாது. நம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்குமான வெற்றி இது. என்னைப் பொருத்த வரை இந்த 20 பேரும் உண்மையிலேயே சாகசம் நிகழ்த்தியவர்கள். ஒரு விளையாட்டு வீரராகவோ, தடகள வீரராகவோ இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குறிப்பாகக் குத்துச் சண்டை வீரரின் சாகசம் நிச்சயம் எளிதானதல்ல.
என்னுடைய, 'பாக்ஸர்' திரைப்படத்துக்காக நான் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தப் பாத்திரத்தில் நடிக்க நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தேன். ஆனால் இந்த வீரர்கள் தளராத முயற்சியோடு இரவு பகலாக, ஆன்மசுத்தியோடு வியர்வை சிந்துவதைப் பார்க்கும்போது உண்மையிலேயே திகைப்பாக இருக்கிறது.
அவர்களுக்கான ஆதரவு என்பது மிகக் குறைவாக இருக்கும்போதும் அவர்களின் கடுமையான பயிற்சி வியப்பை ஏற்படுத்துகிறது. அவர்களை நேரில் சந்தித்துப் பாராட்டுக்களையும் ஊக்குவிப்பையும் அளிக்க விரும்பினேன். அவர்களுடையை வருங்கால தொழில்முறைச் சாதனைகள் அனைத்துக்கும் தான் உறுதுணையாக இருப்பேன். என்கிறார் அருண் விஜய்.