AD

மெஹ்ரினுக்கு நெஞ்சில் நீங்காத வருத்தம்

2 ஆண்டுகளுக்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் நெஞ்சில் துணிவிருந்தால். சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரின் நடித்திருந்தனர். சுசீந்திரன் மிகவும் எதிர்பார்த்த இந்தப்படம் சரியாக போகவில்லை. படத்தின் நீளத்தை குறைக்கும் பொருட்டு மெஹ்ரின் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது. அதுகுறித்து தற்போது தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் மெஹ்ரின். அவர் கூறியதாவது:

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நான் நடித்த அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டது. எந்த ஒரு நடிகைக்கும் அவரது காட்சிகள் நீக்கப்பட்டால் வருத்தமாகத்தான் இருக்கும், அதிலும் அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டால் எப்படி இருக்கும். அந்த வருத்தம் என் நெஞ்சில் ஆழமாக பதிந்திருக்கிறது. என்றாலும் இயக்குனர் சுசீந்திரன் அதை என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தார். அந்த வகையில் அவரது நேர்மை பாராட்டுக்குரியது.

சில நேரங்களில் நம்முடைய கட்டுப்பாட்டை தாண்டி சில விஷயங்கள் நடக்கும். இதை அப்படித்தான் எடுத்துக் கொண்டேன். தற்போது தனுஷ் ஜோடியாக பட்டாசு படத்தில் நடித்து வருகிறேன். அவர் ஒரே டேக்கில் நடித்து விடுவார். நான் நிறைய டேக் வாங்குவேன். அப்போதும் எந்த முக சுழிப்பும் இல்லாமல் நடிப்பார். வசனத்தை உச்சிரிக்க கற்றுத் தருவார். எனக்கு தெலுங்கு சரளமாக பேச வரும் அதனால் நானே டப்பிங் பேசுகிறேன். தமிழ் கற்று வருகிறேன். என்றார்.