AD

நடிகர் சங்கத்தின் வேண்டுகோள்

பொள்ளாச்சி பாலியல்  பலாத்கார சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இச் சம்பவத்திற்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டன அறிக்கை வெளியிட்டிருப்பதோடு, பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. 

தலைவர் நாசர் வெளியிட்டுள்ள நடிகர் சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

 ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் வரும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பற்றிய செய்திகள் மனதை கனக்கச் செய்கின்றன.   படுபாதக செயல்களை பல காலங்களாக திட்டமிட்டு ஒரு கும்பல் செய்து வந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக பார்க்க முடிகிறது. 

இதன் பின்னணியில் உள்ளவர்களை விரைவாக கண்டறிந்து, அவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என காவல்துறையிடம் வேண்டுகோள் வைக்கிறோம்.

இச்செயலில் பொலிஸார் நேர்மையாகவும் துணிவுடனும் விரைந்து செயல்படுவார்கள் என நம்புகிறோம், அந்த நேர்மைக்கு எப்போதும் தென்னிந்திய நடிகர் சங்கம் துணை நிற்கும் என  உறுதியளிக்கிறோம்.

அலைபேசியில் உள்ள இணையதளங்கள் முகநூல் வாட்ஸ்-அப் போன்ற விஞ்ஞான வளர்ச்சியில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நம்மை வழி நடத்துவதில் நம்ம பெற்றோருக்கு இருக்கக்கூடிய பொறுப்பும், கனவுகளும், வேறு யாருக்கும் இருக்கப்போவதில்லை. 

அதனால் ஒரு குறிப்பிட்ட வயது வரை நம் பெற்றோர்களுக்குத் தெரியாமல் எந்த ஒரு உறவுகளையும் நட்புகளையும் யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம் என இளைய தலைமுறையினரை தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கிறது. என்றுள்ளது.