AD

கொலையுதிர் காலம் - 7வது முறையாக வெளியீட்டுத் தேதி மாற்றம்

கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்', அஜித் நடித்த 'பில்லா 2' ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலெட்டி, இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'.

இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை 7வது முறையாக மாற்றி வைத்துள்ளார்கள். இதற்கு முன்பு ஜனவரி, பிப்ரவரி, மே மாதங்களில் வெளியீடு என மாற்றி மாற்றி அறிவித்தார்கள். அதன்பின்பு ஜுன் 14, ஜுலை 26, ஆகஸ்ட் 1 என தேதியுடன் அறிவித்தாலும் படம் வெளியாகவில்லை.

கடந்த வாரத்தில் ஒரு நாள் ஜுலை 26 வெளியீடு என்றார்கள், மறுநாளே ஆகஸ்ட் 1 என மாற்றிவிட்டார்கள். இன்று ஆகஸ்ட் 1ம் இல்லை ஆகஸ்ட் 2தான் படத்தின் வெளியீடு என அறிவித்துள்ளார்கள். இந்தப் படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள 7வது வெளியீட்டுத் தேதி இது. இந்த முறையாவது படம் கண்டிப்பாக வெளியாகுமா, அல்லது கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்படுமா என்பது படத்தின் தயாரிப்பாளருக்கே வெளிச்சம்.

நயன்தாரா போன்ற ஒரு டாப் நடிகையின் படத்திற்கு இத்தனை முறை வெளியீட்டுத் தேதி அறிவிப்பு என்பது அவரது இமேஜுக்கு உகந்ததல்ல. இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில் இப்படத்திற்கும் வியாபார வட்டாரங்களில் வரவேற்பு இல்லை என்றே சொல்கிறார்கள்.