AD

மகிழ்ச்சியில் நடிகர் ஆர்யா!







சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா.

2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினி காந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இவர் பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார்.

கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. காதலர் தினத்தன்று தாங்கள் திருமணம் செய்ய இருப்பதை ஒப்புக்கொண்டனர்.

ஆர்யா, சாயிஷா திருமணம் கடந்த 10-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் இந்தி சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

 திருமணத்தில் நடிகர்கள் சூர்யா, விஷால், கார்த்தி, ஷாம் உள்ளிட்ட ஆர்யாவின் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


ஆர்யாவிடம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-

‘சாயிஷாவை மனைவியாக பெற்றதில் மகிழ்ச்சி. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது. 

அதன் பின்னர் நண்பர்களாக மாறினோம். காப்பான் படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியபோது எங்களுக்குள் இருந்த நட்பை பார்த்து, இருவரது பெற்றோரும் நிச்சயித்து திருமண ஏற்பாடுகள் செய்தார்கள்.

வெகுகாலமாக என் பெற்றோர் என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தனர். அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றியதிலும் அவர்களுக்கு பிடித்த பெண்ணையே மனைவியாக அமைந்ததிலும் எனக்கு மகிழ்ச்சி. 

திருமணத்துக்கு பின்னர் நடிப்பது குறித்து சாயிஷாவின் முடிவுக்கே விடுகிறேன். அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டேன்’ என கூறினார்.

ஆர்யா நடிப்பில் மகாமுனி, டெடி என 2 படங்கள் தயாராகி வருகிறது. சாயிஷா காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

#Arya #Ayyeshaa #ஆர்யா #சாயிஷா