AD

நள்ளிரவில் குவிந்த ரசிகர்கள்!







அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு வடசென்னையில் நடந்து வரும் நிலையில், விஜய், நயன்தாராவை காண ரசிகர்கள் இரவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.

காட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து புறப்படும்போது காரில் தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கி பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று விஜய் அறிவுரை கூறிய வீடியோ வைரலானது. பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள்.


அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவினால் தடுப்பு வேலி சரிந்து ரசிகர்கள் கீழே விழப்போனார்கள். விஜய் மற்றும் அவரது உதவியாளர்கள் அந்த வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழாதபடி தடுத்தனர்.

தற்போது இதன் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார். அதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் தலைவா என்று கோஷம் போட்டனர். இந்த வீடியோவும் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

#Vijay63 #Vijay #Nayanthara