AD

சர்ச்சை கருத்திற்கு பின் கமலை சந்தித்த லாரன்ஸ்



சமீபத்தில் நடைபெற்ற "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், நடன  இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் கமல்ஹாசன் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ராகவா லாரன்ஸ்க்கு கமல் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இது குறித்து ராகவா லாரன்ஸ் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.



இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் அவர்களை சந்தித்து அவரிடம் நேரில் விளக்கம் அளித்ததாகவும் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்து பரப்பப்படுகின்றது என்று நான் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன்.

இந்நிலையில் இன்று  கமலஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். எனது விளக்கத்தை ஏற்றுக் கொண்ட கமலஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.
அவருக்கு என் நன்றியையும் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் தெரிவித்துள்ளார்.