AD

பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யாவாக மாறிய சாண்டி

பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யா போன்று வேடமணிந்து சாண்டி செய்த அலப்பறைகளால் கலகலப்பாக இருந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது போட்டியாளராக வெளியேறி இருக்கிறார் மோகன் வைத்யா. முதல் போட்டியாளராக பாத்திமா பாபு வெளியேறிய போது வீட்டின் சூழலை அது மாற்றவில்லை. ஆனால், இரண்டாவது போட்டியாளராக வனிதா வெளியே சென்ற போது, அதன் தாக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.

அதுவரை சண்டைக்கோழியாக வலம் வந்த வனிதா, வீட்டை விட்டு வெளியேறியதால், நிகழ்ச்சியே போரடிப்பதாகக் கூட விமர்சனங்கள் எழுந்தன. மீண்டும் அவரை வீட்டிற்குள் அழைத்து வரும்படி பிக்பாஸ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது போட்டியாளராக மோகன் வைத்யா வெளியேறி இருக்கிறார். எப்போதும் அவரை வைத்து ஏதாவது காமெடி செய்து கொண்டிருக்கும் சாண்டியும், கவினும் இதனால் பெரும் சோகமடைந்துள்ளனர். எப்போது பார்த்தாலும் அவரைப் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டை விட்டு வெளியேறிய அவசரத்தில் மோகன் வைத்யா, தனது சில உடைகள் மற்றும் செருப்பை மறந்து வைத்து விட்டு போய் விட்டார். நேற்றைய எபிசோட்டில் அதை வைத்து தான் சாண்டியும், கவினும் களேபரம் செய்தனர். மோகன் வைத்யா போன்றே மேக்கப் போட்டுக் கொண்டு சாண்டி, வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் ரகளை செய்தார். 

நிஜமாகவே மோகன் வைத்யா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விட்டாரோ என ஆச்சர்யப்படும் வகையில், தத்ரூபமாக அவரைப் போலவே நடித்துக் காட்டினார் சாண்டி. இதனால் நேற்றைய எபிசோட் கலகலப்பாக இருந்தது.