AD

தன் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி : புகார் அளித்த நடிகை

சமீப நாட்களாக பல இணையதள பக்கங்களில் நடுத்தர வயது இல்லத்தரசிகள் சிலரின் புகைப்படத்தை வெளியிட்டு வீட்டில் இருந்தபடியே மாதம் இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார் இந்த அம்மா என அதில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி ஒரு இணையதளத்தில் தன்னுடைய அனுமதியின்றி தன் புகைப்படத்தை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மலையாள நடிகை பீனா ஆண்டனி என்பவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்..

மலையாளத்தில் சின்ன சின்ன குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பீனா ஆண்டனியின் புகைப்படத்தை அந்த விளம்பரத்தில் பதிவிட்டுள்ளனர். மேலும் அவரது பெயர் ஆபா கர்ப்பால் என்றும், அவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டு, இவர் மாதம் தோறும் 6.5 லட்சம் ரூபாய் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சம்பாதிக்கிறார் என விளம்பரப்படுத்தி உள்ளனர்.


ஆரம்பத்தில் இந்த விளம்பரத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும், பின்னர் இது எவ்வளவு பெரிய மோசடியான செயல் என்பதன் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக சைபர் க்ரைம் போலீசில் சென்று புகார் அளித்துள்ளார் பீனா ஆண்டனி.