AD

ரஜினியின் இமேஜைக் காப்பாற்றிய சிவகுமார்

தமிழ்த் திரையுலகத்தின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் வில்லனாக, இரண்டாவது கதாநாயகனாக நடித்த படங்கள் உள்ளன. அவற்றில் சிவகுமாருடன் அவர் இணைந்து நடித்த 'கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி' ஆகிய படங்கள் முக்கியமானவை.

'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் சிவகுமாரை விடவும் அதிகப் பெயர் வாங்கியவர் ரஜினிகாந்த். அந்தப் படங்களில் சிவகுமாருடன் இணைந்து நடித்த அனுபவத்தைப் பற்றியும், தன் இமேஜ் கெடக்கூடாது என்பதற்காக சிவகுமார் செய்த விஷயத்தைப் பற்றியும், 'காப்பான்' இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“கவிக்குயில்' பட ஷூட்டிங்ல அந்தப் படத்தோட கதாநாயகிகள் ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி ரெண்டு பேர் கிட்டயும் பேசிக்கிட்டே இருப்பேன். அதைப் பார்த்து சிவகுமார், எப்பப் பார்த்தாலும் பொன்னுங்க்கிட்டயே பேசிட்டு இருக்கியே, புத்தகம் ஏதாவது படிக்கலாமில்லையான்னு திட்டுவாரு.

அப்புறம் 'புவனா ஒரு கேள்விக்குறி' பட ஷுட்டிங் சமயத்துல படத்தோட ஹீரோயின் சுமித்ராகிட்ட பேசிட்டிருப்பேன். ஒரு நாள் ஒரு உதவி இயக்குனர் வந்து இரண்டு பக்கத்துக்கு வசனம் கொடுத்து, ஈவ்னிங் அந்த காட்சியை எடுப்போம் படிச்சிக்கோங்கன்னு சொன்னாரு. நானும் அப்புறம் அதையே மனப்பாடம் பண்ணிட்டிருந்தேன்.

சிவகுமார் வந்து படத்துல அப்படி ஒரு சீன் எதுவுமில்லை. நீ ரொம்ப நேரமா சுமித்ரா கூட பேசிட்டிருந்த, யாராச்சும் பார்த்தால் உன்னை பொம்பள பொறுக்கினு சொல்லிடக் கூடாது இல்லையா, அதான் இப்படி பண்ணேன் எனச் சொன்னாரு. எனக்கு கெட்ட பெயர் வந்துடக் கூடாதுன்னு என்னைப் பார்த்துக்கிட்டவரு அவரு,” என ரஜினிகாந்த் பேசிய போது அரங்கில் சிரிப்பலையும், கைத்தட்டல்களும் ஒன்றாய் எழுந்தன.