AD

நடித்தாலும் மருத்துவத்தை விட மாட்டேன் - நடிகர் தீரஜ்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜீவி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த சூழலில் நல்ல கதையம்சத்துடன் அடுத்து வெளியாகும் திரைப்படம் "போதை ஏறி புத்தி மாறி". 

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கிறார். தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இப்படத்தின் இயக்குனர் கேஆர் சந்துரு பேசுகையில், குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு ஐடியா கிடைத்தது. இது ஒரே வீட்டில் நடக்கும் கதை. இந்த படத்துக்கு சவுண்ட் மிக்ஸிங் ஒரு முக்கிய அம்சம். நான் ஒரு ரசிகனாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன். தலைப்புக்கு மிகவும் பொருத்தமான படமாக இருக்கும் என்றார்.

இப்படத்தின் நாயகன் தீரஜ் கூறுகையில், சிறுவயதில் இருந்தே நடிக்கும் ஆசை எனக்கு இருந்தது. என் ஆசைக்காக நேரம் கிடைக்கும்போது நடிக்க ஆசைப்படுகிறேன். அதே நேரத்தில் நான் படித்த மருத்துவத்தை கை விடாமல், தினமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.

இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.