AD

மாஃபியாகை 37 நாளில் முடிக்க திட்டம்

துருவங்கள் பதினாரு படத்தின் மூலம் கவனிக்க வைத்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அதன் பிறகு அவர் இயக்கிய நரகாசுரன் படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அவர் மாஃபியா என்ற படத்தை இயக்குகிறார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதனை 37 நாளில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார் கார்த்திக் நரேன். இதுகுறித்து அவர் கூறியதாவது:
படப்பிடிப்பை 37 நாட்கள் கால அட்டவணையில் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஸ்கிரிப்டை முடித்தவுடனேயே, அருண் விஜய்தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று என்னால் உணர முடிந்தது, குறிப்பாக தடம் பார்த்த பிறகு. எனினும், அவர் என் கதையை கேட்டு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி எனக்குள் இருந்தது.

ஏனெனில் பல திரைப்படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார். கதையை கேட்டு எந்த மாற்றமும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார். அது போலவே லைகா புரொடக்ஷன்ஸ், பல பெரிய படங்களை தயாரித்து வந்தாலும், எந்தவிதமான தலையீடும், கேள்விகளும் இன்றி எனக்கு முழு சுதந்திரம் அளித்தனர். இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு நம்பிக்கைக்குரிய திரைப்படத்தை வழங்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

அருண் விஜய் கேங்க்ஸ்டராக நடிக்கவில்லை, வடசென்னை பகுதியிலும் படத்தின் கதை இருக்கப் போவதில்லை. மாஃபியா வேறுபட்ட ஒரு களத்தை கொண்டிருக்கும் என்பதை மட்டும் தான் என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும் என்றார்.